275 கல்லூரி விடுதிகளில் ரூ.2.74 கோடியில் செம்மொழி நூலகம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ஆர்.கார்த்திக் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 2021-22ம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையின் போது பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நல அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோரால், கல்லூரி விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வி அறிவு மற்றும் பொது அறிவினை வளர்க்க 273 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக்கல்லூரி விடுதிகளில் தலா ஒரு நூலகம் செம்மொழி நூலகம் என்ற பெயரில் 2 கோடியே 73 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் பொருட்டு பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனர், சிறுபான்மையினர் நல இயக்குனரின் கடிதங்களில், “273 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் அறிவு நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு விடுதிக்கும் செம்மொழி நூலகம் என்ற பெயரில் தலா ஒரு நூலகம் அமைக்கலாம். இத்திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு ஒரு குழுவினை அமைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

நூலகம் அமைய உள்ள அறையின் நுழைவாயிலில் செம்மொழி நூலகம் என்ற பெயர் பலகை நிறுவப்படும். கல்லூரி விடுதிகளில் தலா ரூ.50,000 செலவில் புத்தகம் வழங்கவும், தளவாட பொருட்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். நூலகத்தில் தலைசிறந்த மற்றும் தரமான புத்தங்களை தேர்வு செய்ய மாநில அளவிலான குழு அமைக்கப்படும். இத்திட்டத்தினை செயல்படுத்த தேவைப்படும் 2 கோடியே 74 லட்சத்து 52 ஆயிரம் ஒப்புதல் வழங்கி ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: