தளவாடப் பொருட்களுக்கு தட்டுப்பாடு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தொழிற்சங்கத்தினர் கடிதம்

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மின்வாரிய தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், பொறியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை. அதாவது 22 மேற்பார்வை பொறியாளர் பதவிகள், 38 செயற்பொறியாளர் பதவிகள், 100க்கும் மேற்பட்ட உதவி செயற்பொறியாளர் பதவிகள், கணக்கீட்டாய்வாளர் பதவியில் இருந்து வருவாய் மேற்பார்வை பதவி உயர்வுகள், நிர்வாக மேற்பார்வையாளரில் இருந்து உதவி நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் (கணக்கு) மற்றும் (நிர்வாகம் பதவியில் இருந்து உதவியாளர் பதவிகள், உதவியாளர் கணக்கிலிருந்து கணக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வுகள், தொழில்நுட்ப உதவியாளரில் இருந்து இளமின் பொறியாளர் 2ம் நிலை, பட்டயம் அல்லாத களப்பிரிவு பணியாளர்களில் இருந்து இளமின் பொறியாளர் 2ம் நிலை, உள்முக தேர்வு மூலம் அனைத்து பதவி உயர்வுகள் மற்றும் நிர்வாகப் பிரிவில் பதவி உயர்வுகள் ஆகியவை பல மாதங்களாக வழங்கப்படாமல் இருப்பது பணியாளர்கள் மத்தியில் மனச்சுமையை அதிகரித்துள்ளது.

மேலும், விருப்ப மாறுதல் விண்ணப்பங்கள் வாரிய விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல, வெளிப்படைத் தன்மையோடு உத்தரவுகள் வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். வேலைபளு ஒப்பந்தத்தின்படி உருவாக்கப்பட்ட 63 பிரிவு அலுவலகங்களுக்கும், புதிதாக உருவாக்கப்பட்ட துணை மின் நிலையங்களுக்கும் மறுபகிர்வு செய்யப்பட்ட கட்டுமானம் உள்ளிட்ட இடங்களுக்கும் பதவிகள் அனுமதித்திட வேண்டும். வழுதூர் மற்றும் குத்தாலம் எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையங்களை அவுட்சோர்சிங் விடக்கூடாது. மின்வாரிய பணியாளர்களுக்கு 1.12.2019 முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். இதற்கான குழு அமைக்கப்பட்டும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்பதை கவனத்திற்கு கொண்டு வருகிறோம். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். எனவே தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் இக்கடித்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தொழில் அமைதியையும் தொழில் உறவையும் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: