சென்னை: மழையால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்துவருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 24 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர். நீர்நிலைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீராலும், தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாகவும், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல், வருவாயின்றி தவித்து வரும் மக்கள் வாழ்வதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வெள்ள நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.