குடியாத்தம்: குடியாத்தம் அருகே தொடர் கனமழையால் விவசாய நிலத்தில் 2 கிலோ எடையுள்ள ராட்சத காளான் முளைத்துள்ளது. இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மழைக்காலங்களில் அதிக ஈரமுள்ள பகுதிகளில் காளான் வளர்வது வழக்கம். இவற்றில் உணவுக்கு பயன்படுத்தக்கூடிய காளான்களும், நச்சுத்தன்மை கொண்ட காளான்களும் உள்ளன. அதன்படி குடியாத்தம் அடுத்த பாண்டியன் நகர் பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பெரிய அளவிலான காளான் முளைத்துள்ளது. வழக்கமாக காளான் 50 கிராம் எடை அளவில் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த காளான் 2 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இதையறிந்த அக்கம் பக்கத்தினர் இந்த ராட்சத காளானை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.