சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 62 ஆயிரம் கி.மீ நீள சாலைகள் உள்ளது. இந்த நிலையில் பெருகி வரும் போக்குவரத்துக்கேற்ப சாலையை அகலப்படுத்துவது, மேம்படுத்துவது, புதிதாக பாலங்கள் கட்டுவது, புறவழிச்சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலை புதுப்பிக்கப்படுகிறது. அவ்வாறு புதுப்பிக்கப்படும் சாலைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வசதியாக 14 ஆயிரம் சாலை பணியாளர், சாலை ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில், சாலை பணியாளர்கள் தகுதிக்கேற்ப சாலை ஆய்வாளர்களாகவும், டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்த சாலை ஆய்வாளர்களுக்கு இளநிலை வரை தொழில் அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆட்சி காலத்தில் சாலை ஆய்வாளர்களுக்கு இளநிலை வரை தொழில் அலுவலராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் தமிழ்நாடு திறன்மிகு உதவியாளர்கள் சங்கம் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தனர்.
அந்த மனுவின் பேரில் முதன்மை இயக்குனர் குமார் முதல்வரின் தனிப்பிவு அலுவலருக்கு அளித்து இருக்கும் பதிலில் கூறியிருப்பதாவது: நெடுஞ்சாலைத்துறையில் உள்ள திறன்மிகு உதவியாளர் நிலை-2 (சாலை ஆய்வாளர் நிலை-2, திறன்மிகு உதவியாளர்-1 (சாலை ஆய்வாளர் நிலை-2) பதவியில் இருந்து இளநிலை வரை தொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்கும் நேர்வில் முதுநிலை பட்டியல் அனைத்து கோட்டங்களிலும் தயார் செய்து முதுநிலை நிர்ணயம் செய்ய கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளரிடம் கோரப்பட்டுள்ளது. மாநில அளவிலான முதுநிலை பட்டியல் தலைமை பொறியாளரிடம் பெறப்பட்டதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.