சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி மாஜி முதல்வர் எடப்பாடி உதவியாளர் கைது: பண்ணை வீட்டிற்கு வந்தபோது சுற்றிவளைத்தனர்; தலைமறைவான அதிமுக பிரமுகரை பிடிக்க தீவிரம்

சேலம்: சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில், மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியை, குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் அதிமுக பிரமுகரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் மணி (51). இவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர். இவர் மீது கடந்த செப்டம்பர் மாதம், செம்மாண்டபட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் செல்வகுமார், தனக்கு தெரிந்த நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக வாங்கி கொடுத்த ரூ.1.39 கோடியை மோசடி செய்துவிட்டதாக எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இதுபற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாத இறுதியில் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே குறிஞ்சிப்பாடியை சேர்ந்த குணசேகரன் மகன் தமிழ்ச்செல்வன் (28), சேலம் எஸ்பி ஸ்ரீஅபிநவ்விடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், இன்ஜினியரான தனக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சத்தை, எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி, அதிமுக பிரமுகர் செல்வகுமார் ஆகியோர் பெற்றனர். ஆனால், வேலை வாங்கித் தரவில்லை. ரூ.4 லட்சத்தை மட்டும் திரும்ப தந்து விட்டு, மீதி பணத்தை மோசடி செய்து விட்டனர் எனக்கூறியிருந்தார்.

இதுபற்றி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி இளமுருகன் விசாரணை நடத்தி, மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் நடுப்பட்டி மணி, அதிமுக பிரமுகர் செல்வகுமார் ஆகிய 2 பேர் மீதும் கூட்டுசதி (120-பி), மோசடி (420) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அவர்களை கைது செய்ய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மணி, செல்வகுமார் ஆகியோர், சேலம் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடியானது. உடனே நடுப்பட்டி மணி, சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து தலைமறைவான எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மணி, செல்வகுமார் ஆகிய இருவரையும் கைது செய்ய, டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. விசாரணையில், மணி பல்வேறு ஊர்களுக்கு காரில் சுற்றித்திரிவதை போலீசார் கண்டறிந்தனர். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஊர்களில் வசிக்கும் அதிமுக முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் ரகசியமாக அவர் தங்கி வந்தார். இதுபற்றி தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை, சேலம் தீவட்டிப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மணி வந்தார். அப்போது, தனிப்படை போலீசார், சுற்றிவளைத்து மணியை கைது செய்தனர். பின்னர், அவரை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், இன்ஜினியர் தமிழ்செல்வன் உள்பட வேறு யாரிடமெல்லாம் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி ஏமாற்றினார்? என்ற கோணத்தில் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர். பலரிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்து விட்டதாக மணி தெரிவித்துள்ளார். மேலும், இம்மோசடியில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா? என்றும், மோசடி செய்த பணத்தில் எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளார்?, வங்கிகளில் டெபாசிட் இருக்கிறதா? என்றும் தனிப்படை போலீசார் விசாரித்துள்ளனர். கைதான மணி, தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்டோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக, கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் மட்டும் அவர் மீது 10க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகார்களின் பேரிலும், அவர் மீது வழக்கு நடவடிக்கையை குற்றப்பிரிவு போலீசார் எடுக்கவுள்ளனர்.

இதனிடையே, மணியை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில், அவருக்கு கொரோனா இல்லை என முடிவு வந்தது. அதன்பின் சேலம் ஜே.எம்.4 மாஜிஸ்திரேட் முன் அவரை ஆஜர்படுத்தினர். அவர், மணியை வரும் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். திருச்சி சிறையில் அடைப்பு: கைது செய்யப்பட்ட மணியை, சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சிறையில் அடைப்பதற்காக போலீசார் கொண்டு சென்றனர். ஆனால், சிறை நிர்வாகம் திருச்சி மத்திய சிறையில் அடைக்க பரிந்துரை செய்தது. இதையடுத்து, அவர் இரவோடு இரவாக திருச்சி கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், தலைமறைவாக இருக்கும் அதிமுக பிரமுகர் செல்வகுமாரை கைது செய்ய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* 4 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் மோசடி

கைதான மணி, ஆரம்ப காலத்தில் ரேஷன்கடை ஊழியராக வேலை பார்த்தார். பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட காரணத்தால் டிஸ்மிஸ் ஆனார். பிறகு எடப்பாடி பழனிசாமி, அமைச்சராக இருந்த காலத்தில் அவருடன் சேர்ந்து கொண்டார். அவரும் தனது உதவியாளராக மணியை நியமித்துள்ளார். 4 ஆண்டுகள் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்த காலத்தில், மணியின் ஆட்டம் அதிகமாக இருந்ததாக அதிமுகவினரே பலமுறை புகார்கள் தெரிவித்துள்ளனர். அந்த காலக்கட்டத்தில், போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, வேளாண் துறை, கூட்டுறவுத்துறை என பல்வேறு துறைகளில் அதிகாரி பணியிடம் முதல் கடைநிலை ஊழியர் பணியிடம் வரை வேலை வாங்கி தருவதாகவும், அதிகாரிகளுக்கு பணியிட மாறுதல் வாங்கி தருவதாகவும் கூறி, ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் அதிமுக கட்சி நிர்வாகிகளே அவரிடம் பணத்தை கொட்டிக் கொடுத்துள்ளனர். வேலை வாங்கி தராத நிலையிலும், முதல்வர் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரின் உதவியாளராக இருக்கிறாரே எனக்கருதி, அவர் மீது புகார் ஏதும் கொடுக்காமல் கட்சியினர் இருந்துள்ளனர். தற்போது, கடலூர் இன்ஜினியர் தமிழ்செல்வன் கொடுத்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதால், இனி அதிகமான புகார்கள் வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: