வி.கே.புரம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக பாபநாசம் அணையிலிருந்து நேற்று முன்தினம் 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. அதேபோல் காரையாறு சொரிமுத்தையனார் கோவிலில் கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதல் மழை குறைந்த காரணத்தால் தாமிரபரணி ஆற்றில் பக்தர்களும் பொதுமக்களும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் காரையார் சொரிமுத்தையனார் கோவிலில் பக்தர்கள் செல்வதற்கு நேற்றும் வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் கோயிலுக்கு செல்ல வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நேற்று காலை 7 மணியில் இருந்து 8 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்கு படிப்படியாக குறைக்கப்பட்டு 3400 கனஅடி நீர் மட்டும் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.