அமராவதி அணையில் இருந்து 6வது முறையாக உபரிநீர் வெளியேற்றம்

உடுமலை: நீர்வரத்து அதிகரித்ததால், அமராவதி அணையில் இருந்து நள்ளிரவு தண்ணீர் திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன்மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்களும் குடிநீர் வசதி பெறுகின்றன. தென்மேற்கு பருவமழை காலம் அணைக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் கணிசமான அளவு நீர்வரத்து இருக்கும்.  இந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்ததால் அமராவதி  அணை நிரம்பியது.

கடந்த சில வாரங்களாக அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் இருந்து வருகிறது. ஏற்கனவே, 5 முறை உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 18ம் தேதி உபரிநீர் வெளியேற்றப்பட்ட பிறகு, தொடர்ந்து 88 அடியிலேயே நீர்மட்டம் இருந்தது. நீர்வரத்து சீராக இருந்தது.  இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, 3 ஷட்டர்கள் வழியாக நள்ளிரவு 2 மணி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை நீர்வரத்து 4843 அடியாக இருந்தது. 5041 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் 6 முறை உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: