சின்னாளபட்டி: திண்டுக்கல் வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட சிறுமலை அடிவாரத்தில் உள்ளது ராமக்கால் மற்றும் ஆணை விழுந்தான் ஓடை நீர்த்தேக்கம். வெள்ளோடு, செட்டியபட்டி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம விளைநிலங்களின் நீராதாரமாக இந்த நீர்த்தேக்கம் உள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சியில் வருவாய் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி ஏற்பாட்டில் ரூ.6 கோடி செலவில் இந்நீர்த்தேக்கம் சீரமைக்கப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த நீர்த்தேக்கம் பராமரிக்கப்படவில்லை. இதனால் கடந்தாண்டு ராமக்கால், ஆணைவிழுந்தான் ஓடை நீர்தேக்கத்தில் தண்ணீர் வெளியேறியது. இந்த ஆண்டும் பொதுப்பணித்துறையினர் முறையாக பராமரிக்காததால் ஆணை விழுந்தான் ஓடை நீர்த்தேக்கத்தின் மதகு சேதமடைந்துள்ளதால் தற்போது அதன் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.