வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பரபரப்பு: ஆடுடன் வந்து புகார் அளித்த பெண் சாமியார்

வேலூர்: வேலூர் சலவன்பேட்டை அம்மணாங்குட்டை ரோட்டை சேர்ந்தவர் இந்திரா(50). பெண் சாமியாரான இவர், அங்காளம்மன் கோயிலில் குறி சொல்லி வருகிறார். இந்நிலையில் இந்திரா நேற்று காலை தனது ஆடுடன் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார்.  அதில், ‘எனது எதிர் வீட்டை சேர்ந்த குணா, அவரது மகள் லட்சுமி ஆகியோர் இரவு நேரங்களில் எனது வீட்டின் மீது கற்களை வீசுகின்றனர்.

வீட்டுக்கு வெளியே கட்டியுள்ள ஆட்டை அடித்து துன்புறுத்துகின்றனர். நேற்று முன்தினம் இரவு கூட ஆட்டை குணா தாக்கியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட என்னை தாய், மகள் இருவரும் சேர்ந்து தாக்கினர். என் மீதும் ஆட்டை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தார். பெண் சாமியார் ஒருவர் ஆடுடன் வந்து போலீசில் புகார் அளித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: