புதிய வைரசால் இந்தியாவில் 3வது அலைக்கு வாய்ப்பு ?

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா தீவிரமாக உள்ளது. தடுப்பூசி திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது இந்த தருணத்தில் தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள புதிய வகை வைரசான ஒமிக்ரான் வைரஸ், உலகமெங்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது

இந்த புதிய வகை வைரசால் 3வது அலை இனி வரும் நாட்களில் உருவாகலாம் என்று தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஆலோசகரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் நரேஷ் புரோகித் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் என்பது ஒற்றை இழை கொண்ட ஆர்.என்.ஏ. வைரசாகும். பிறழ்வுகள் (உரு மாற்றங்கள்) மரபணு வரிசையில் ஏற்படுகிற மாற்றங்கள் ஆகும். அவை வைரஸ் பரிணாம வளர்ச்சியில் இயல்பான ஒன்றுதான். ஒரு வைரஸ் எளிதில் பாதிக்கக்கூடிய ஒரு உடலில் நுழைகிறபோது, அது நகல் எடுக்கத்தொடங்குகிறது. நோய்த்தொற்றின் பரவலுடன் நகலெடுப்பதும் அதிகரிக்கிறது. ஒரு வைரஸ் கொண்டிருக்கிற பிறழ்வு, உருமாற்றம் ஆகும்.

புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள பி.1.1.529 வைரஸ், இந்தியாவில் 3-வது அலையை ஏற்படுத்தலாம். தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ். தற்போதுள்ள உருமாறிய வைரஸ்களை விட ஸ்பைக் புரதத்தில் கூடுதல் பிறழ்வுகளை கொண்டுள்ளது என்பதால் தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

தடுப்பூசி திட்டம் முன்னேற்றம் கண்டு வருகிற நிலையில், 3-வது அலையில் இருந்து நோய் எதிர்ப்புச்சக்தியை பெற்றிருக்கிறோம் என நினைத்தவர்களுக்கும், நோய்த்தொற்று ஏற்பட்டபோது அறிகுறி இல்லாமல் இருந்தவர்களுக்கும் இந்த வைரஸ் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

தற்போது இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்துள்ள நிலையில், புதிய வகை வைரசால் 3-வது அலை உருவாகலாம். தொற்று பாதிப்பு அதிகரிக்கலாம். சில மாநிலங்களில் நிலைமை மோசமாகலாம்.மற்ற உருமாறிய வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் இந்த வைரசின் ஸ்பைக் புரதத்தில் அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள் இருக்கின்றன. இது தடுப்பூசிகள் திறம்பட செயல்படுவதற்கு முக்கியம் ஆகும்.

இந்த வைரஸ் டெல்டாவிடம் இருந்து அதிக ஆதிக்கம் செலுத்தும் என்பது கவலை அளிக்கிறது. டெல்டா வைரஸ் அதிகமாக பரவுகிற தன்மையை கொண்டது.புதிய வைரசை பொறுத்தமட்டில் அதன் பரவும் தன்மை, தடுப்பூசி செயல்திறன் குறித்து எந்த முடிவான ஆதாரமும் இல்லை. அதே நேரத்தில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: