மிக அதிக மழை பெய்யும் இக்காலத்தில் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுடன் நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்: மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: மிக அதிக மழை பெய்யும் இக்காலத்தில் நேரம், காலம் பார்க்காது களத்தில் பணியாற்றி வரும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுடன் நானும் களத்தில் நிற்கிறேன், நிற்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் செய்துள்ள பதிவு வருமாறு: சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து, முடிந்தவரை உடமைச் சேதங்களைக் குறைத்து, பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு, நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழு முதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது.

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன், நிற்பேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: