டெல்லி: புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரதமரிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். மிகவும் சிரமப்பட்டு, கொரோனாவில் இருந்து நம் நாடு மீண்டுள்ளது. இந்த புதிய மாறுபாடு வைரஸ் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்வோம் என டெல்லி முதல்வர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் (B.1.1.529) தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய வைரஸ்களைவிட அபாயகரமானவை என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது.