அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு பாபநாசம் அணையில் 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

*சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்ல தடை

வி.கே.புரம் : நெல்லை,  தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மேற்குத் தொடர்ச்சி  மலையிலும் மழை கொட்டியதால் பாபநாசம் அணையில் நேற்று காலை 10 மணிக்கு 20  ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் சொரிமுத்தையனார் கோயிலுக்கு  செல்லும் வழியில் உள்ள பாலம் மூழ்கியது, கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை  விதிக்கப்பட்டது. மாலையில் நீர்வரத்து குறைந்ததால் நீர் திறப்பும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று  முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. மழையால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால், நேற்று காலை 10 மணிக்கு அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர்  திறக்கப்பட்டது. இதனால் காரையார் சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்லும்  பாலத்தை மூழ்கடித்துக் கொண்டு வெள்ளம் ஓடியது. இதன் காரணமாக சொரிமுத்தையனார்  கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் பாபநாசம் கோயில் படித்துறை  முன்பு அமைந்துள்ள பிள்ளையார் கோயிலை மூழ்கடித்துக் கொண்டு வெள்ள நீர்  செல்கிறது. கடும் வெள்ளம் காரணமாக பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் யாரும்  குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் மாலை 6 மணிக்கு நீர் திறப்பு 4ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி  நிலவரப்படி பெய்த மழை அளவு: பாபநாசம்- 81 மிமீ, சேர்வலாறு- 50,  மணிமுத்தாறு- 94.6,நம்பியாறு- 80, கொடுமுடியாறு- 70, அம்பை- 79,  சேரன்மகாதேவி-84.80, நாங்குநேரி- 64, ராதாபுரம்- 54, களக்காடு- 96.2,  மூலக்கரைப்பட்டி- 93, பாளையங்கோட்டை- 107, நெல்லை- 76.20 மிமீ.

தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு: கடனா-  32 மிமீ, ராமநதி- 35, கருப்பாநதி-19, குண்டாறு-7, அடவிநயினார்- 27,  ஆய்க்குடி- 52, செங்கோட்டை- 13, தென்காசி- 33.18, சங்கரன்கோவில்-38,  சிவகிரி- 45 மிமீ.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி  நிலவரப்படி முந்தைய 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு: திருச்செந்தூர்- 248,  காயல்பட்டினம்- 306, குலசேகரன்பட்டினம்- 158, விளாத்திகுளம்- 41,  காடல்குடி- 52, வைப்பார்- 149, சூரங்குடி- 56, கோவில்பட்டி- 71,  கழுகுமலை-36, கயத்தாறு-58, கடம்பூர்-90, ஓட்டப்பிடாரம்- 121, மணியாச்சி-  87, வேடநத்தம்- 80, கீழஅரசடி- 59, எட்டயபுரம்- 78.9, சாத்தான்குளம்- 121,  வைகுண்டம்- 179, தூத்துக்குடி- 266.60 மிமீ. காயல்பட்டினத்தில் ஒரே நாளில்  306 மிமீ மழை பதிவானது, இயற்கை ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: