காரைக்குடி அருகே தரைபாலத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்

* போக்குவரத்துக்கு தடை விதிப்பு

காரைக்குடி : காரைக்குடி அருகே தரைபாலத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ககரைக்குடி அருகே கல்லல் அரண்மனை சிறுவயலில் இருந்து காளையார்கோவில் செல்லும் சாலையில் சறுகணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

 தஞ்சை சாயல்குடி செல்லும் முக்கிய சாலையான இப்பகுதியில் தரைப்பாலத்திற்கு பதில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நபார்டு கடன் உதவியில் 2020ம் ஆண்டு ரூ.10 கோடியே 34 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியது. இதற்காக தரைப்பாலத்தின் அருகே தற்காலிகமாக தரைப்பாலம் அமைத்து போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.

மேம்பாலம் அமைக்கும் பணி இந்த ஆண்டு நவம்பருடன் முடிந்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை பணிகள் முடிவடையாமல் ஆமைவேகத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக சறுகணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலத்தில் அதிகஅளவில் தண்ணீர் செல்கிறது.

இதனால் காளையார்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பாகனேரி வழியாக 10 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் குணாளன் கூறுகையில், ‘‘கல்லலில் இருந்து காளையார்கோவில் செல்வதற்கு பிரதான சாலை இதுதான். மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கி ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் இதுவரை முடிக்காமல் உள்ளனர்.

பாலம் வேலை நடப்பதாகவே தெரியவில்லை. ஆமைவேக பணியால் இன்னும் பாதி வேலையை கூட முடிக்காமல் உள்ளனர். தற்போது பெய்த மழையால் போக்குவரத்து தடைபட்டதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். அருகே உள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளது. பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு பாலத்தை கொண்டு வர வேண்டும் என்றார்.

Related Stories: