சென்னை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் எம்.ஜி.சி.லீலாவதி, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 72. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், 1984ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது, அவருக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை அளித்து எம்ஜிஆரின் புனர்வாழ்வுக்குக் காரணமாக இருந்தவர் லீலாவதி. எம்ஜிஆரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், மருத்துவமனையில் எம்ஜிஆர் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் எனும் தகவலை, கேரளாவில் இருந்த லீலாவதி, நாளிதழ்கள் மூலம் தெரிந்து கொண்டார்.
திருமணமாகியிருந்த நிலையிலும் கணவரின் ஒப்புதலுடன் தனது சித்தப்பாவுக்குச் சிறுநீரக தானம் செய்தார். லீலாவதி தான், தனக்குச் சிறுநீரக தானம் கொடுத்தார் என முதலில் எம்ஜிஆருக்கு தெரியாது. அது குறித்த தகவல்கள் அவருக்குச் சொல்லப்படவில்லை. உடல்நலம் பெற்று திரும்பிய எம்ஜிஆருக்கு, சில நாட்களுக்குப் பின்னர் நாளிதழ் ஒன்றின் மூலம் தகவல் தெரிந்தது. வலம்புரி ஜான் எழுதியிருந்த வாழ்த்துரையில் ‘லீலாவதிக்கு நன்றி’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல் அறிந்ததும் லீலாவதியை ராமாவரம் தோட்ட இல்லத்துக்கு அழைத்துக் கண்ணீருடன் நன்றி சொன்னார் எம்ஜிஆர்.