சென்னை: தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,03,258 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 746 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,23,991 ஆக உள்ளது. நேற்று கொரோனாவில் இருந்து 759 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 26,79,130 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நேற்று உயிரிழந்தனர்.
அதிகபட்சமாக கோவையில் 3 பேர், செங்கல்பட்டு 2 பேர், ஈரோடு, நாமக்கல், தென்காசி, தஞ்சாவூர், திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர் என 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 36,443 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் 8,418 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 103 பேர், கோவையில் 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.