நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கொட்டிய கன மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தெற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய தமிழக கடலோரத்தில் நீடித்து வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றின் திசை மாறுபாடு காரணமாக, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருப்பினும் தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாமல் நீடித்த கன மழை சற்று வேகம் தணிந்தாலும், தூறல் மழையாக விடியவிடிய நேற்று காலை வரை நீடித்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 306 மிமீ மழை பதிவானது. தூத்துக்குடியில் 266 மிமீ, திருச்செந்தூரில் 248 மிமீ மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் கோயிலில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் புகுந்த நிலையில், இரவோடு இரவாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதல் வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாநகரில் தற்காலிக பஸ் நிலையம், தருவை விளையாட்டு மைதானம் ஆகியவை தண்ணீரில் மிதக்கின்றன. இவை தவிர ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் வரண்டியவேல் அருகே வெள்ள நீர் ஓடியதால் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. இதனால் திருச்செந்தூர் - தூத்துக்குடி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையில் கனமழை கொட்டியதால் பல இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கன மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தைப்பூச மண்டபம், உள்ளிட்ட ஏராளமான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தாமிரபரணியின் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ளம் ஓடுகிறது. நேற்று மாலை நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் 25 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ள நீர் ஓடியது. இத்துடன் சிற்றாற்று வெள்ளமும் கலப்பதால் தாமிரபரணியின் கடைசி அணைக்கட்டான வைகுண்டம் அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீருக்கு மேல் வீணாக கடலுக்கு செல்கிறது.