அடுத்த மாதம் 6ம் தேதி இந்தியா - ரஷ்யா இடையே முதல் 2+2 பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இந்தியா, ரஷ்யா இடையேயான முதல் 2 + 2 பேச்சுவார்த்தை, அடுத்த மாதம் 6ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள், நட்பு நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையே 2 + 2 என அழைக்கப்படுகிறது. இதன்படி, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா ஏற்கனவே 2 + 2 பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இந்நிலையில், இந்தியா, ரஷ்யா இடையேயான முதல் கட்ட 2 +2 பேச்சுவார்த்தை அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ``வரும் டிசம்பர் 6ம் தேதி இந்தியாவுக்கு வரும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் 2 + 2 பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆப்கானிஸ்தான், சிரியாவின் தற்போதைய நிலை உள்பட இந்தோ-பசிபிக், சர்வதேச பிரச்னைகள் பற்றியும் விரிவாக விவாதிக்க இருக்கின்றனர்,’’ என்றார். இந்நிலையில், இந்தியா - ரஷ்யா இடையேயான 21வது உச்சி மாநாட்டில் பங்கேற்க டிசம்பர் 6ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வருகிறார்.

Related Stories: