கான்பூர்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 345 ரன் குவித்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 129 ரன் எடுத்துள்ளது. கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்திருந்தது. ஷ்ரேயாஸ் அய்யர் 75 ரன், ஜடேஜா 50 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஜடேஜா மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் சவுத்தீ வேகத்தில் கிளீன் போல்டானார். ஷ்ரேயாஸ் - ஜடேஜா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த சாஹா 1 ரன் மட்டுமே எடுத்து சவுத்தீ பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிளண்டெல் வசம் பிடிபட்டார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய அறிமுக வீரர் ஷ்ரேயாஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 105 ரன் எடுத்து (171 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) சவுத்தீ வேகத்தில் யங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.