சாத்தான்குளம் அருகே கோமானேரிகுளம் நிறைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது: போக்குவரத்து துண்டிப்பு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே கோமானேரி குளம் நிறைந்து கூவைகிணறு குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சாலையை உடைத்து தண்ணீர் விட நடவடிக்கை எடுத்ததையடுத்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம்  பகுதியில் தொடர் 10 மணி நேரமாக மழை பெய்ததில் சாத்தான்குளம் அருகே உள்ள கோமானேரி குளம் நிறைந்து மறுகால் விழுந்து வெளியேறியது. இதில் கூவைகிணறு  கரையோர பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

ஊராட்சித் தலைவர் கலுங்கடி முத்து, துணைத்தலைவர் ஐகோர்ட்துரை, ஒன்றிய கவுன்சிலர் ப்ரெனிலா போனிபாஸ் ஆகியோர் உடனடியாக சாத்தான்குளம் தாசில்தார் தங்கையாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் தங்கையா, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் விரைந்து வந்து அங்குள்ள தரைமட்ட  பாலம் சாலையை பொக்லைன் இயந்திரம் கொண்டு  உடைந்து தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுத்தனர். தண்ணீரானது அடுத்த குளமான  வேலன்புதுக்குளத்துக்கு சென்று வருகிறது.

10 ஆண்டுகளாக வெள்ள நேரங்களில் தண்ணீர் ஊருக்குள் செல்வது தொடர்கிறது.  அங்கு 3 இடங்களில் தரைமட்ட பாலம் உள்ளது. அதனை மாற்றி உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும்  என கிராம மக்கள் கோரிக்கை  விடுத்து வருகின்றனர்.  ஆனால் இன்னும் அமைக்கப்படாமல் உள்ளது. வெள்ளநீர் வரும்போதெல்லாம் இந்த அவல நிலை தொடர்கிறது. ஆதலால் அதிகாரிகள் ஆய்வு நடத்தி கோமானேரி, கூவைகிணறு பகுதியில் சிறிய  பாலங்களை உயர்மட்ட பாலமாக அமைக்க நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Related Stories: