கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை டிசம்பர் 23-க்கு ஒத்திவைப்பு; உதகை நீதிமன்றம் உத்தரவு.!

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணையை டிசம்பர் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உதகை மாவட்ட நீதிமன்றத்தில்  விசாரணை நடைபெற்றது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சையான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றதில் ஆஜராகினர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம் பகதூரைக் கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்தக் கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வாளையாறு மனோஜுக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளைச் சிறையில் உள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாகக் காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், கடந்த 25-ம் தேதி தனபால் மற்றும் ரமேஷை போலீஸார் கைது செய்தனர். நேற்று தனபாலை 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் போலீஸாருக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் மட்டுமே ஆஜராகியிருந்தனர். அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கிறஞர் ஷாஜகான், கனகராஜ், அரசு வழக்கறிஞர் ஆனந்த் ஆஜராகினர். விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர்கள் புலன் விசாரணைக்கு நீண்ட அவகாசம் தேவை என வலியுறுத்தினர். அதன் பேரில் நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும், தனபால் மற்றும் ரமேஷின் ஜாமீன் வழக்கு விசாரணையின்போது, அரசு வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இருவரும் சாட்சியங்களை அளித்துள்ளனர். இருவருக்கும் அரசியல் பிரமுகர்களின் தொடர்பு உள்ளது. போலீஸ் காவலில் நடந்த விசாரணையில், இருவரும் பல தகவல்களைத் தெரிவித்தனர். அதனடிப்படையில், விசாரணை நடந்து வருகிறது. இருவருக்கும் ஜாமீன் வழங்கினால், இவர்கள் சாட்சியங்களையும், ஆதாரங்களையும் அழிக்க வாய்ப்புள்ளது. எனவே, இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டனர்.

Related Stories: