கர்நாடகா மதுபாட்டில்கள் கடத்திய 7 பேர் கைது-2 பைக், கார் பறிமுதல்

சித்தூர் : சித்தூர் டிஎஸ்பி சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:சித்தூர் முதலாவது காவல் நிலையத்திற்கு கர்நாடக மதுபாட்டில்கள் காரில் கடத்துவதாக ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து முதலாவது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நரசிம்ம ராஜூ மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அனில் குமார் மற்றும் போலீசார் சித்தூர் பி.வி.கே.என் அரசு கல்லூரி பின்புறத்தில் உள்ள வனத்துறை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த இரண்டு பைக்குகளை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கர்நாடக மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்து. மேலும் பைக்குகளில் வந்தவர்கள் மற்றும் காரில் இருந்தவர்கள் என 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் 7 பேரும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மது பாட்டில்கள் குறைந்த விலைக்கு வாங்கி வந்து சித்தூர் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், லோகநாதன்(36), ரங்காபுரம் அடுத்த பலமனேர் காந்தி(26), சந்தப்பேட்டை திவாகர் (37), சந்தப்பேட்டை எல்லம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜா(35), சந்தப்பேட்டை ஜெய்சங்கர்(30), தேன பண்ட பகுதியைச் சேர்ந்த உஸ்மான் (30), மார்க்கெட் தெரு முராஜ் (31), வீரபத்திரர் நகர் காலனியைச் சேரந்தவர் உட்பட 7பேர் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் சித்தூர் மாநகரத்தில் சந்தப்பேட்டை மார்க்கெட், கட்டமஞ்சு, கிரீம்ஸ் பேட்டை, ராம் நகர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கர்நாடக மதுபாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 2,688 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் 2 பைக்குகள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ₹7 லட்சம் மதிப்பு கார் மற்றும் 2 பைக்குளின் மதிப்பு ₹ 7 லட்சம் என மொத்தம் ₹14 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் மற்றும் கார், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். அப்போது முதலாவது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நரசிம்மா ராஜூ, சப்-இன்ஸ்பெக்டர் அனில் குமார் உள்பட ஏராளமான போலீசார் உடனிருந்தனர்.

Related Stories: