பிரபல ரவுடி கொலையில் 8 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஒழலூரில், நேற்று முன்தினம் இரவு, பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், 8 பேரை கைது செய்தனர். செங்கல்பட்டு, முருகேசனார் தெருவை சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஸ்வரன் (28). பிரபல ரவுடி. இவர்மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, கஞ்சா கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சமடைந்த விக்னேஸ்வரன், குடும்பத்துடன் சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்தார்.

கடந்த 23ம் தேதி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்காக விக்னேஸ்வரன், தனது குடும்பத்துடன் சென்றார். ஒழலூரில் உள்ள மாமியார் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு, அவர் நீதிமன்றம் சென்றார். பின்னர் மாமியார் வீட்டுக்கு வந்தார். இரவு 9.30 மணியளவில் விக்னேஸ்வரனின் செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய அவர், ஒழலூர் பிரதான சாலைக்கு சென்றார். அங்கு மறைந்து இருந்த மர்மநபர்கள், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.

புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் விக்னேஸ்வரனுக்கும், செங்கல்பட்டு ஜாபர் தெருவை சேர்ந்த ரவுடி அன்வர் (30) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, எஸ்ஐ சங்கர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்தவேளையில், ஒழலூர் பகுதியில் பதுங்கி இருந்த அன்வர் (30), அவரது கூட்டாளி சாஸ்திரி நகர் பன்னீர்செல்வம் (35) ஆகியோரை நேற்று அதிகாலையில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

இதில், அன்வரின் முகநூலை தவறாக பயன்படுத்திய விக்கேஸ்வரன், அன்வரின் காதலியிடம் இருந்து ரூ.10 ஆயிரம் ஏமாற்றி வாங்கினார். அதை விக்கியின் வீட்டுக்கு சென்று, அவரது தந்தையை மிரட்டி அன்வர் பெற்று கொண்டார். தன் தந்தையை மிரட்டிய அன்வரை தீர்த்துகட்ட விக்னேஸ்வரன் முயற்சி எடுத்தார். ஆனால், முடியவில்லை. பின்னர் இருவரும் சமரசம் நண்பர்களாக மாறினர். அதன்பிறகு, அன்வரின் நண்பர் பன்னீர்செல்வத்தை தீர்த்து கட்டினால், விக்னேஸ்வரன் செங்கல்பட்டில் ரவுடியாக வலம் வரமுடியும் என அன்வரிடம் செல்போனில் கூறியுள்ளார். இதை பதிவு செய்த அன்வர், பன்னீர்செல்வத்திடம் அந்த பதிவை கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம், ‘‘என்னையே கொலை செய்ய திட்டம் தீட்டிய விக்கினேஸ்வரனை, நாம் தீர்த்துக்கட்ட வேண்டும்’’ என அன்வரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஒழலூரில் உள்ள விக்கியின் மைத்துனர் ரஞ்சித் (28), அவரது நண்பர் பீட்டர் (27) ஆகியோருடன் ஆலோசனை செய்தனர். அப்போது, அவர்கள் மூலம் நீதிமன்ற விசாரணைக்கு வரும் விக்கியை அழைத்து வந்து கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி, விசாரணைக்கு வந்த விக்னேஸ்வரனை ரஞ்சித், பீட்டர் மூலம் மது அருந்த வரவழைத்தனர். அப்போது அவர்கள், விக்னேஸ்வரனை வெட்ட வரும்போது, நாங்கள் ஓடிவிடுவோம் என பேசி வைத்தபடி தப்பி சென்றனர்.

அதேபோல் அன்வர், பன்னீர்செல்வம், அஜய், ஆகாஷ், ராஜேஷ், விஜிபா ஆகியோர் பைக்கில் சென்று விக்னேஸ்வவரனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர் என அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி செங்கல்பட்டு கேகே தெருவை சேர்ந்த அஜய், (27), முருகேசனார் தெரு விஜிபா (23) குண்டூர் ஆகாஷ், ராஜேஷ் (29), நத்தம் ரேடியோமலை பீட்டர் (27), ஒழலூர் ரஞ்சித் (28) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: