பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே பதவி விலகிய சுவீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர்!!

சுவீடன் : சுவீடன் நாட்டின் முதல் பெண் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மக்டலேனா ஆன்டர்சன் பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே பதவி விலகினார். ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் ஸ்டெஃபான் லோவன் தோல்வி அடைந்ததை அடுத்து ஆளும் சமூக கட்சி தலைவராக மக்டலேனா ஆன்டர்சன் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மக்டலேனா ஆன்டர்சனுக்கு ஆதரவாக 117 எம்பிக்களும் எதிராக 177 எம்பிக்களும் வாக்களித்தனர். அந்நாட்டு அரசியல் அமைப்பு சட்டப்படி, பிரதமராக பதவியேற்க பெரும்பான்மை தேவையில்லை. 175 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் போதும்.

அதன் அடிப்படையில் மக்டலேனா ஆன்டர்சன் பிரதமராக தேர்வானார். ஆனால் அவர் தாக்கல் செய்த பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது. மற்றும் கூட்டணி கட்சிகளும் ஆதரவை திரும்பப் பெற்றதால் மக்டலேனா ஆன்டர்சன் பதவி விலகினார். சுவீடன் நாட்டின் பிரதமராக மக்டலேனா ஆன்டர்சன் 7 மணி நேரம் பதவி வகித்தார். இதன் மூலம் அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை மக்டலேனா ஆன்டர்சனை சேர்ந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் தான் ஆட்சி அமைக்க விரும்புவதாக கூறியுள்ள அவர், கூட்டணி கட்சிகளின் ஆதரவின்றி பெரும்பான்மையுடன் பிரதமர் ஆவேன் என்று மக்டலேனா ஆன்டர்சன் சூளுரைத்துள்ளார்.அந்நாட்டில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: