×

காட்டுக்குள் கல்யாணப் புகைப்படம்!

நன்றி குங்குமம் தோழி

முன்பெல்லாம் எந்த ஒரு புகைப்பட கலைஞருக்கும் சமூகத்தில் தனி ஒரு மரியாதை இருந்தது. காரணம், அவர்களின் எண்ணிக்கை சொற்பம். ஆனால், தற்போது அந்த நிலை மாறியுள்ளது. குடும்பத்தில் ஒரு புகைப்பட கலைஞர்கள் உருவாகியுள்ளனர்.இப்படிப்பட்ட ஒரு போட்டி நிறைந்த துறையாக மாறி வரும் புகைப்படத் துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்து, விதவிதமாக புகைப்படங்களை எடுத்து வரும் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுபாஷ், திருமண நிகழ்வுகளில் புகைப்பட கலைஞர்களின் தற்போதைய நிலை என்னவாக இருக்கிறது என்பது பற்றிப் பகிர்ந்து கொண்டார்.

“திரைப்படத்தின் மீதுள்ள ஈர்ப்பால் விஸ்காம் படித்தேன். அந்நேரம் குடும்பச் சூழலும் கொஞ்சம் சிரமமாக இருந்ததால் எதாவது வேலைக்குப் போக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். வேலைக்குப் போனாலும் என்னுடைய துறை மட்டும் மாறக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.அதனால் கேமராவில் என்ன செய்ய முடியும் என்று பார்த்த போது திருமணங்கள், மற்ற நிகழ்ச்சிகளுக்கான போட்டோகிராபி பண்ணலாம் என்று இதில் வேலை செய்ய ஆரம்பித்தேன். முதலில் எடுத்ததே பெரிய திருமணம் என்பதால் உத்வேகம் கிடைத்தது. அதனை தொடர்ந்து பல நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறேன்” என்று கூறும் சுபாஷ், “தற்போது  வாடிக்கையாளர்களே நம்மிடம் சில யோசனைகள் சொல்லி எடுத்துத் தரும்படியான சூழல் உருவாகியுள்ளது” என்கிறார்.

“வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் உலகில் தலைமுறையின் அப்டேட்டால் பல மாறுதல்கள் வெட்டிங் போட்டோகிராபியில் மாறியிருக்கிறது. முன்பெல்லாம் ஆல்பம் போட்டு வீட்டிற்கு வருபவர்களுக்கு காண்பிப்பது ஒரு சம்பிரதாயமாகவே இருந்தது. ஆனால், தற்போது டிசைன் செய்ததை சாஃப்ட் காப்பியாக அனுப்பச் சொல்லி, அதனை தங்களது நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலமாகவோ, இன்னும் பல டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலமாகவோ பகிர்கின்றனர்.

இதனால் பிரிண்டிங் தொழிலில் உள்ளோர் பாதிப்படையக் கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது.அதே போல் திருமணம் முழு நிகழ்வுகளையும் எடுத்துத் தர சொல்லி அது இரண்டு, மூன்று மணி நேரங்கள் ஓடக் கூடியதாகக் கொடுக்கப்படும். ஆனால், தற்போது அதனை சுருக்கி திரைப்படங்கள் பாணியில் ஒரு பாடலோ, இசை கோர்ப்போடு ‘கேண்டிட் வீடியோ’  என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் கேட்கின்றனர், ஸ்டுடியோ நபர்களும் அதனையே பரிந்துரைக்கின்றனர்.

இது பெரும்பாலும் வாடிக்கையாளர்களின் பொருளாதார நிலையினை பொறுத்து மாறுபடுகிறது. பொதுவாகப் பணக்காரர்கள், அப்பர் மிடில் கிளாசில் இதற்கான தேவை இருக்கிறது. நடுத்தர நபர்களுக்கும் தங்களின் திருமண ஆல்பம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசைகள் இருக்கும். அவர்களால் மற்றவர்கள் போல் அதிகம் செலவு செய்ய முடியாது என்றாலும், அவர்களின் திருமண வைபோகம் எடுத்திருக்கும் வீடியோவிலிருந்து கொஞ்சம் கிரியேட்டிவாக எங்களால் முடிந்த அளவு செய்து தருகிறோம்” என்றார்.

டிஜிட்டல் யுகத்தில் செல்போன்களின் மூலமாகவும், வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் பல படித்த இளைஞர்கள் இந்த தொழிலில் வந்திருப்பதாலும் ஏற்கனவே இதையே தொழிலாக வைத்திருக்கும் நபர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம்.  “இந்த நபர்கள் எல்லாம் தற்போதைய தலைமுறையைப் போட்டியாகவும், சிலர் இவர்களுடன் இணைந்து வேலை பார்ப்பவர்களாகவும் இருக்கின்றனர்” என்று கூறும் சுபாஷ், “தமிழகத்தில் திருமணத்திற்கான கேண்டிட் புகைப்பட, வீடியோ கலையில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகக் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்” என்கிறார்.

“ஒரு காலத்தில் ரோல் கணக்கில் ஆர்டர் பேசுவார்கள். தற்போது அந்த நிலை பேக்கேஜ் கணக்காக மாறியிருக்கிறது. அதாவது அன்று எடுத்து கொடுக்கும் ஒவ்வொரு புகைப்படங்களும் காசாக இருந்தது. ஆனால், இன்று ஒரு நிகழ்வில் ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கப்படுகிறதென்றால் அனைத்தையும் வாடிக்கையாளர்களுக்கு காப்பி பண்ணிக் கொடுத்துவிடுகிறோம். அதிலிருந்து தேவையானதைத் தேர்வு செய்து தருவதை பிரிண்டாக கொடுக்கிறோம்.

இந்தியா எப்போதும் மேலை நாடுகளிலிருந்துதான் பாதி கிரியேட்டிவான விஷயங்களை இறக்குமதி செய்கிறது. அந்த வகையில் திருமணத்திற்கு முன்பான, ‘பிரி வெட்டீங்’ ஷூட் தற்போது பிரபலமாகி வருகிறது. இதை பெரும்பாலும் பணக்காரர்கள், ஐ.டி வேலையில் இருப்பவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதை தீம் மாதிரி ஒரு சில வாடிக்கையாளர்களே வடிவமைக்கிறார்கள்.

உதாரணமாகக் காடு என்ற தலைப்பில் ஒரு ரிசார்ட் அல்லது காட்டுப் பகுதிக்குச் சென்று அங்கு புகைப்படம் எடுக்கப் படுகிறது. அதில் கிரீன் டோன் அதிகமாக இருக்கும். கடல் என்றால் புளூ டோன். அதற்கேற்றார் போல் உடைகள் என ஒரு தீமின் கீழ் எடுப்பதை அவர்களும் விரும்புகிறார்கள். இது எங்களுக்கு இன்னும் சவாலாகவும், கிரியேட்டிவாகவும் எடுக்க முடிகிறது” என்கிறார் சுபாஷ்.

Tags : forest ,
× RELATED காட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட...