'டும்... டும்... டும்... டும்...'

நன்றி குங்குமம் தோழி

ஒரே நாளில் சகோதரிகளுக்கு திருமணம் நடப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்கிறீர்கள் தானே. இவர்கள் அனைவரும் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள். கேரளாவின் பொத்தன்கோடு நானுட்டுகாவு கிராமத்தில் 1995ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி அன்று பிரேம்குமார்- ரமாதேவி தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தன.

இதில் 4 பெண்கள், ஒரு ஆண் குழந்தை. இவர்கள் அனைவரும் உத்திர நட்சத்திரத்தில் பிறந்ததால் உத்ரஜா, உத்ரா, உதாரா, உத்தமா என பெயரிட்டு வளர்க்கப்பட்டனர். இவர்களுடன் பிறந்த ஆண் குழந்தைக்கு உத்ராஜன் எனப் பெயர்.

இந்த குழந்தைகளுக்கு 9 வயதான போது தந்தை பிரேம்குமார் செய்த தொழிலில்  நஷ்டம் ஏற்பட்டதால்  தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஆதரவற்ற நிலையில் இருந்த அவரது மனைவி ரமாதேவிக்கு மாநில அரசு  கூட்டுறவு வங்கியில் பணி வழங்கியது. 5 குழந்தைகளையும் சிறப்பாக படிக்க வைத்த ரமாதேவி  உத்ராவை  ஃபேஷன் டிசைனராகவும், உத்ரஜா, உத்தமா ஆகியோரை மயக்கவியல் மருத்துவராகவும், உத்தாரா பத்திரிகையாளராகவும், பணியாற்றி வருகின்றனர்.

தற்போது 24 வயதை எட்டிய 4 சகோதரிகளுக்கு தனது கணவர் ஆசைப்படி சிறப்பாக திருமணம் நடத்த முடிவு செய்துள்ளார் ரமாதேவி. அதுவும் ஒரே நாளில். நான்கு பேருக்கும் தகுந்த மாப்பிள்ளைகளை தேட ஆரம்பித்தார். மாப்பிள்ளைகளும் அவர்களுக்கு ஏற்ப அமைந்துவிட்டதால், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை சகோதரர் உத்ராஜன் செய்து வருகிறார்.

இந்த சிறப்பான தருணம் குறித்து தாய் ரமாதேவி கூறுகையில், ``என் கணவரின் திடீர் மரணம் எனக்கு அதிர்ச்சியளித்தது. என்னுடைய குழந்தைகளுக்காக ஒவ்வொரு தடைகளையும் தாண்டி வந்தேன். குழந்தைகள் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என என் கணவர் நினைத்தார். அவரது கனவை நனவாக்க 4  மகள்களின் திருமணத்தை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தேன்’’ என்றார் ரமாதேவி.

கோமதி பாஸ்கரன்

Related Stories: