திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மப்பேடு மற்றும் உளுந்தை ஆரம்ப சுகாதார நிலையங்களின் எல்லைக்குட்பட்ட 100 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தும் சீர்வரிசை பொருட்களை வழங்கியும், அறுசுவை உணவுகளை பரிமாறினார். விழாவிற்கு ஒன்றியக் குழு தலைவர் சுஜாதா சுதாகர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரஸ்வதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.ராம்குமார், வட்டார மருத்துவ அலுவலர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திரா வரவேற்றார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் மோ.ரமேஷ், நிர்வாகிகள் ஆர்.கோபால், பி.காமராஜ், ஜெயவேல், அண்ணாமலை, கீதா முனுசாமி, தேவராஜ், ரவி, ஒன்றிய கவுன்சிலர் கேபிஎஸ்.கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.