பசும்பொன்னில் யாகசாலை பூஜைகளுடன் தேவர் குருபூஜை விழா துவக்கம்

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் 114வது ஜெயந்தி விழா, 59வது குருபூஜை விழா நடைபெறுகிறது. அவரது நினைவிடத்தில் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் நேற்று காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகளுடன் ஆன்மீக விழா துவங்கியது. தேவர் சிலைக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதணை நடந்தது. இன்று காலை இரண்டாம் நாள் யாகசாலை பூஜை, லட்சார்ச்சனை மற்றும் அரசியல் விழா நடக்கிறது. இதில் பொதுமக்கள் பால்குடம், வேல், அக்னிச்சட்டி எடுத்து வந்து தேவர் நினைவிடத்தில் செலுத்த உள்ளனர்.

நாளை காலை தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்த உள்ளனர். தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை: தேவர் ஜெயந்தி விழாவுக்கு தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி கோரி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சங்கிலி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். அரசின் கட்டுப்பாடுகளில் தலையிட்டால் கொரோனா பரவலுக்கு காரணமாகிவிடும் எனக் கூறிய ஐகோர்ட் கிளை மனுவை ஏற்காமல் முடித்து வைத்தது.

Related Stories: