நகைக்கடன் வழங்கியதில் ரூ.2.5 கோடி சுருட்டல் அதிமுக நிர்வாகிகள் மீது குற்ற நடவடிக்கை: அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

அவனியாபுரம்: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் கொடுத்ததில் ரூ.2.5 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. இதில் தொடர்புடைய அதிமுக நிர்வாகிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள கூட்டுறவு நகர வங்கியில் உள்ள பெட்டகம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ரூ.2.5 கோடி அளவிற்கு போலி நகைகள் இருந்தன. போலி நகைகள் மற்றும் தரம் குறைவான நகைகளை வைத்து 77 பேருக்கு நகைக்கடன் வழங்கப்பட்டிருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தொடர்ச்சியாக பல வங்கிகளில் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கூட்டுறவு நகர வங்கியிலேயே இரண்டரை கோடி ரூபாய்க்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தலைவராக, நிர்வாகிகளாக இருந்தவர்கள் இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீதும், யார், யார் இந்த நகைகளை அடகு வைத்து கடன் பெற்று மோசடி செய்துள்ளார்களோ அவர்கள் மீதும் கண்டிப்பாக குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். கூட்டுறவு பயிற்சி நிலையங்கள் அனைத்து ஊர்களிலும் உள்ளன. எந்த பயிற்சி நிலையமும் இடமாற்றம் செய்யப்படவில்லை. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தவறாக சொல்கிறார்.  கூட்டுறவு வங்கி மாநில தலைவருக்கு சொந்தமாக பல கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

* 30 சதவீதம் நடந்த ஆய்வில் ரூ.15 கோடிக்கு முறைகேடு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் 30 சதவீதம் அளவுக்கு இதுவரை ஆய்வு நடந்துள்ளது. இதில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.15 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கூம்பூர் வங்கியில் நகையே இல்லாமல் வெறும் பையை வைத்தே பணம் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் முறைகேடுகளை தவிர்க்க கூட்டுறவு கடன் சங்கம், கூட்டுறவு வங்கியில் அனைத்து கணினிகளை ஒன்றாக இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இது 6 மாதத்திற்குள் முடிக்கப்படும்’’ என்றார்.

Related Stories: