துபாய்: இலங்கை அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா அபாரமாகப் பந்துவீசி அசத்தினார். துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. பதும் நிஸங்கா, குசால் பெரேரா இருவரும் இலங்கை இன்னிங்சை தொடங்கினர். நிசங்கா 7 ரன்னில் வெளியேற, குசால் பெரேரா - சரித் அசலங்கா ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 63 ரன் சேர்த்தது. இருவரும் தலா 35 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
அவிஷ்கா பெர்னாண்டோ 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு முனையில் பானுகா ராஜபக்ச உறுதியுடன் போராட, வனிந்து ஹசரங்கா 4, கேப்டன் தசுன் ஷனகா 12 ரன்னில் அவுட்டாகினர். இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் குவித்தது. ராஜபக்ச 33 ரன் (26 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), சமிகா கருணரத்னே 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஆடம் ஸம்பா 4 ஓவரில் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 155 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.