இன்ஸ்பெக்டர் வீட்டில் 120 சவரன் கொள்ளை

சென்னை : போரூர் அடுத்த கொளப்பாக்கம், சீனிவாச நகரை சேர்ந்தவர் சாம் பென்னட் (59). கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் போக்குவரத்து ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரேமலதா (57). இவர்களது 2 மகள்கள் திருமணமாகி, கணவர் வீட்டில் வசிக்கின்றனர். நேற்று பிரேமலதா, வீட்டில் பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 120 சவரன் நகைகள் மாயமானது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர்.

வீட்டின் பூட்டு, பீரோ பூட்டு உடைக்கப்படாமல் நகைகள் மட்டும் மாயமானது தெரிய வந்தது. வீட்டின் முதல் தளத்தில் 2 வீடுகளை வாடகைக்கு விட்டு, சாம் பென்னட் குடும்பத்துடன் 2வது மாடியில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு மொத்தம் 4 சாவிகள் உள்ளன. அதில் ஒன்றை வாடகைக்கு வசிப்பவர்களிடம் கொடுத்து வைத்துள்ளனர். அவரது மகள்கள் வீட்டிற்கு வரும்போது, அந்த சாவியை வாங்கி பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. எனவே, வாடகை வீட்டில் உள்ளவர்கள் கைவரிசை காட்டினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: