சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மோடி அரசின் மோசமான பொருளாதார கொள்கையாலும், தவறான நிர்வாகத்தாலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 2014ம் ஆண்டில், பெட்ரோல் மீது ₹9.20 ஆக இருந்த ஒன்றிய அரசின் வரி, 2021ல் ₹32.90 ஆக உயர்ந்தியிருக்கிறது.
மோடி பதவியேற்ற கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் மீது 258 சதவீதமும், டீசல் மீது 819 சதவீதமும் ஒன்றிய அரசின் வரியை உயர்த்தியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், வேலை இழப்பு, வருவாய் இழப்பு உள்ளிட்ட காரணங்களால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். எனவே, பெட்ரோல், டீசல் உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை புரிந்து கொண்டும், பண்டிகை காலங்கள் தொடங்கியுள்ளதை கருத்தில் கொண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசு முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.