மத வழிபாட்டுத் தலங்களின் இடையூறுகளால் ஒரு மனிதன் நிம்மதியாக உறங்கக்கூட முடியவில்லை : நீதிபதி வேதனை!!

சென்னை : மத வழிபாட்டுத் தலங்களின் விதிமீறல் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.ஈரோட்டில் உரிய அனுமதி பெறாமல் கட்டிய  தேவாலயத்துக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை எதிர்த்து ஈரோடு தொப்பம்பாளையம் பெந்தக்கோஸ்த் மிஷன் சர்ச் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மக்களின் மத உணர்வுகளை காரணம்காட்டி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது, அதிக ஒலி எழுப்புவது, பிறருக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற விதிமீறல்களை அரசு தீவிரமாக கருத வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும் மத வழிபாட்டுத் தலங்களின் இடையூறுகளால் ஒரு மனிதன் நிம்மதியாக உறங்கக்கூட முடியவில்லை என்று கவலை தெரிவித்த நீதிபதி, நிம்மதியான வாழ்க்கைக்கான பாதுகாப்பை அரசு நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான சத்தத்துடன் தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது என்றும் தெரிவித்தார். அத்துடன் மத வழிபாட்டுத் தலங்களின் விதிமீறல் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டு நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

Related Stories: