×

'இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவோம்'!: தன்னார்வலர்கள் தேர்வில் பெண்களுக்கே முன்னுரிமை...அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி..!!

சென்னை: முற்றிலும் மாநில அரசின் நிதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திட்டுள்ளார். பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மூத்த தலைவர்களும், அனுபவம் வாய்ந்தவர்களும் பல கருத்துகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் சுத்தம் சுகாதாரம் என்ற இணையவழி நிகழ்வை தொடங்கி வைத்த பின்னர் செய்தியர்களிடம் பேசிய அவர்,  முற்றிலும் மாநில அரசின் நிதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுகிறது. எச்சரிக்கை உணர்வுடன் தான் திட்டத்துக்கான தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இதுவரை 80,000 பேர் தன்னார்வலர்களாக பதிவு செய்துள்ளனர். அதில் 68,000 பேர் பெண்கள். தன்னார்வலர்கள் தேர்வில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், அதிகம் படித்தவர்கள் போன்ற பல நிபந்தனைகளின் அடிப்படையில்தான் தேர்வு செய்கிறோம் என்று குறிப்பிட்டார். மேலும் சில கட்சித் தலைவர்கள் கூறியுள்ள எச்சரிக்கை உணர்வுடன் தான் இத்திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இடைநிற்றலை குறைப்பதற்கான வழிவகையாக இல்லம் தேடி கல்வி திட்டம் அமையும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இல்லம் தேடி கல்வித்திட்டத்தை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார் குப்பத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளி முடிந்த பிறகு தினமும் மாலை ஒரு மணி நேரம் ஆடல், பாடல், நாடகம் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு தன்னார்வலர்களால் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிக் குழந்தைகளின் கற்றலில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சரிசெய்யும் நோக்கில்,எஸ்எஸ்ஏ சார்பில், இல்லம் தேடிகல்விஎன்ற திட்டம் ரூ.200 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Magesh , Home Search Education Project, Volunteers, Anbil Mahesh
× RELATED பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில்...