மரபணு மாற்றமடைந்த AY.4.2 வகை கொரோனா வைரசால் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேர் பாதிப்பு; மருத்துவர்கள் எச்சரிக்கை

கர்நாடகா: மரபணு மாற்றமடைந்த AY.4.2 வகை கொரோனா வைரஸின் தாக்கத்தால் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். டெல்டா வகை கொரோனா வைரஸ் மாற்றம் கண்டு பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரசுக்கு AY.4.2 என பெயரிடப்பட்டுள்ளது.

இது வேகமாக பரவும் தன்மை கொண்டது என கூறப்படும் நிலையில் பெங்களூரு நகரில் உள்ள கொரோனா ஆய்வு மையத்தில் மரபணு வரிசைப்படுத்தல் ஆய்வில் ஈடுபட்டபோது 2 பேருக்கு AY.4.2 வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர்களுக்கு சிகிக்சை தொடங்கப்பட்டுள்ளதாகவும் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளதாகவும் பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கவ்ரவ் குப்தா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மரபணு மாற்றம் கண்ட வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவனத்துடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் முகக்கவசம் அணிதல் மற்றும் தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்ற அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: