×

126 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை மோசமான நிலைமையில் தான் உள்ளது... புதிய அணை கட்டுவதே ஒரே தீர்வு : கேரள அரசு

டெல்லி : முல்லைப் பெரியார் அணை பாதுகாப்பாக இருப்பதாக பினராயி விஜயன் சில தினங்களுக்கு முன்பு கூறி இருந்த நிலையில், அணை மிகவும் பலவீனமாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தற்போது கூறி இருப்பது முரண்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. முல்லைப் பெரியார் அணை பாதுகாப்பாக இருப்பதாகவும் தேவையற்ற அச்சம் பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக் 26ம் தேதி கேரளா முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் கூறி இருந்தார். அதே சமயம் அணை நீர்ப்படிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால் நீர் திறப்பை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதினார்.

இதற்கும் பதில் கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர் வரத்திற்கு ஏற்ப 2 மாநில மக்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் தண்ணீர் திறக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறி இருந்தார். இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 126 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அணை மிகுந்த பலவீனமாக இருப்பதாகவும் இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டிய தேவை இருப்பதாகவும் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. அணைக்கு பாதிப்பு ஏற்பட்டால் 5 மாவட்டங்களில் உள்ள 30 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்கும் என்று கேரள அரசு கூறியுள்ளது. 142 அடிக்கு தண்ணீர் சேமிக்கலாம் என்ற மேற்பார்வைக் குழுவின் கருத்தை ஏற்க முடியாது என்றும் 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்த கூடாது என்றும் கேரள அரசு கூறியுள்ளது. கேரள அரசின் இத்தகைய நிலைப்பாடு முரண்பாட்டை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


Tags : Mullaiperiyaru dam ,Government of Kerala , பினராயி விஜயன்
× RELATED நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு...