தீபாவளி வார சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகரிப்பு; கடும் விலை சரிவால் விவசாயிகள் கவலை

ராமநாதபுரம்: பரமக்குடி தீபாவளி வார சந்தையில் வரத்து அதிகரிப்பால் ஆடுகளின் விலை சரிந்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாரந்தோறும் வியாழக்கிழமை கால்நடை சந்தை நடைபெறும். இதில் சிவகங்கை, நரிக்குடி, வீரசோழன், அபிராமம், கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து தங்களுடைய ஆடு மாடுகளை கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்வர்.

தீபாவளியை முன்னிட்டு ஏராளமானோர் தங்களின் ஆடுகளை விற்பனை செய்ய வைத்திருந்தனர். வழக்கமாக 1500 ஆடுகள் வரவேண்டிய இடத்தில் சுமார் 4000 ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இதனால் ரூ 30,000 வரை விற்பனையாக வேண்டிய ஆடுகள் ரூ 20,000 முதல் 25,000 வரை விற்பனை செய்ய பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தீபாவளி ஆட்டு சந்தையில் தங்களுடைய ஆடுகளுக்கு கூடுதல் விலை கிடைக்குமென்று எதிர்பார்த்து வந்த விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளனர். எனினும் தீபாவளி நெருங்கி வருவதால் வாரச்சந்தை கலைக்கட்டியுள்ளது.

Related Stories: