திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்கள் வருகின்ற 3ம் தேதி முதல் தரிசனம் செய்யலாம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. உலக புகழ்பெற்ற திருக்கோயில்களில் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலும் ஒன்று. இந்த கோயிலுக்கு ஐப்பசி மாதம் மாலை அணிவித்து விரதம் இருந்து பக்தர்கள் செல்வது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக கோயில்கள் மூடப்பட்டிருந்தன. கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் குறைந்து வருவதால் இந்த மாதம் கோயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டன.
ஆனாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆன்லைன் முன்பதிவு வசதி ஏற்படுத்தி குறைந்த அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையின் போது கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் நிலக்கல் வரை வந்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில், சித்திரை ஆட்டுத் திருநாள் பூஜைக்காக வரும் 2ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பூஜைகள் நடைபெறவுள்ளது.
இதையடுத்து ஐப்பசி மாத பூஜையில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தவர்கள் வரும் 3ம் தேதி சுவாமி தரிசனம் செய்யலாம் என தேவசம் போர்ட் அறிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்த கூப்பன், 2 தடுப்பூசி அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றுடன் பக்தர்கள் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 3ம் தேதி அடைக்கப்பட்ட பின்னர் மண்டல கால பூஜைகளுக்காக வரும் 15ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படுகிறது. வரும் 16ம் தேதி முதல் மண்டல காலம் ஆரம்பமாகிறது.