லக்னோ : இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாயும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். துபாயில் நடக்கும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த 24ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. பாகிஸ்தான் அணியின் வெற்றியை வெடி வைத்து கொண்டாடியதாக ஜம்மு காஷ்மீர் மருத்துவ மாணவர்கள் மீது ‘உபா’ எனப்படும், ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்’ கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் 5 மாவட்டங்களிலிருந்து 7 பேர் இதுவரை கைது செய்யபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் இதே போன்ற கொண்டாட்டங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநில முதலமைச்சசர் யோகி ஆதித்யநாத், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியோர் மீது தேசத்துரோக வழக்கு பாயும் என எச்சரித்துள்ளார். இதற்கு பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.