சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மாநில அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்தும், அதன் செயலாக்கம் பற்றியும் அறிக்கை அளிக்கும்படி ஆளுநர், அரசின் தலைமைச் செயலாளருக்கு நேரடியாக கடிதம் அனுப்பியுள்ளார். அவரும் அனைத்துத் துறைச் செயலாளர்களும் ஆளுநருக்கு அறிக்கை அளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இந்த முறை மக்களாட்சி முறைக்கு மாறானது.
பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் தங்கள் செயல் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் முகவராக புதிய கவர்னர் அனுப்பப்படுகிறார் என்ற விமர்சனம் எழுந்தது. இன்று நடக்கும் நிகழ்வுகள் அதை உறுதிசெய்யும் வகையில் உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியில் அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளையும், திட்டங்களையும் நிராகரிக்கும் அதிகாரம் ஏதும் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. மாநில அரசிடம் ஏதேனும் விபரம் பெற வேண்டிய தேவை ஆளுநருக்கு ஏற்பட்டால் அவர் முதல்வர் மூலமாக பெற வேண்டும்.
இதற்கு முன்பு இருந்த ஆளுநர் அத்துமீறி செயல்பட்டு, சர்ச்சையில் சிக்கி, சென்ற இடங்களில் எல்லாம் கறுப்புக்கொடி எதிர்ப்பை சந்தித்தார் என்பதை இப்போதைய ஆளுநர் கருத்தில் கொள்ள வேண்டும். ஆளுநரின் அதிகார அத்துமீறல் நடவடிக்கைகளை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். ஆளுநர் தனது கடமைப் பொறுப்புகளை அதன் எல்லைக்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளில் தலைமைச் செயலாளர் கூடுதல் எச்சரிக்கையுடன், அமைச்சரவை அல்லது முதல்வர் ஆலோசனை பெற்று செயல்படுவது அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.