ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் என்றால் பாலின தொழில் செய்யும் இடம் என்ற கண்ணோட்டம் தவறானது: போலீசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் என்றாலே பாலின தொழில் புரியும் இடம்தான் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் உள்ள வில்லோஸ் ஸ்பாவின் உரிமையாளர் ஹேமா ஜூவானி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னையில் பல இடங்களில் தங்களுக்கு மசாஜ் சென்டருடன் கூடிய அழகு நிலையங்கள் உள்ளன. அவற்றில் அடிக்கடி காவல்துறையினர் தொந்தரவு செய்கிறார்கள்.

இது தொடர்பாக நாங்கள்  தொடர்ந்திருந்த வழக்கில், ஆதாரம் இல்லாமல் காவல்துறையினர் தொந்தரவு செய்ய கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தாம்பரத்தில் உள்ள எங்களது கிளையில், பாலியல் தொழில் நடைபெறுவதாக பொய் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தாம்பரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

இதையடுத்து, ஸ்பா மற்றும் மசாஜ் நிலையங்கள் பாலின தொழில் புரியும் இடம்தான் என்ற கண்ணோட்டத்திலேயே பார்ப்பீர்களா?  என்று அவர்களிடம் கேள்வி எழுப்பியதுடன், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்று நீதிபதி  கண்டனம் தெரிவித்தார். பின்னர் மசாஜ் நிலையங்களில் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர மிரட்டும் நோக்கில் செயல்படக் கூடாது என்று போலீசாருக்கு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை நவம்பர் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: