கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: உணவு டெலிவரி ஊழியர் வெட்டி படுகொலை

* வாலிபர் கைது

* 5 பேருக்கு வலை

பெரம்பூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பம்தட்டு தாலுகா நெய்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணி(37), இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தற்போது பெரம்பூர் கென்னடி சதுக்கம் 1வது குறுக்கு தெருவில் தனது நண்பர் சேகருடன் வசித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவிக நகர் பல்லவன் சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் மணி ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக திருவிக நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மணியை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து மணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மணி வீட்டின் கீழ்ப்பகுதியில் ஜெமினி, இளவழகன் என்ற இருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் மணிக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இதில் இளவழகன் என்பவரை பார்க்க அடிக்கடி அவரது நண்பர்கள் வந்து வீட்டின் கீழே அமர்ந்து கஞ்சா புகைத்து வந்தனர். இதனை மணி தட்டி கேட்டதால் அடிக்கடி பிரச்னையானது. நேற்று முன்தினம் இளவழகனின் நண்பர்கள் ரஞ்சித்குமார், அய்யனார், குள்ள கார்த்திக், சின்னா தீபக் உள்ளிட்டோர் முழு கஞ்சா போதையில் மணியைத் தேடி அவரது வீட்டிற்கு சென்றனர். அவர் வீட்டில் இல்லாததால் சேகரை தாக்கினர்.

பின்னர் மணி அவர்களிடம் கேட்டபோது, முழு கஞ்சா போதையில் இருந்த அவர்கள் மணியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக திருவிக நகர் போலீசார் ரஞ்சித்குமார்(27) என்ற வாலிபரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: