சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரியினையும், குடிநீர் கட்டணங்களையும் அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறது. வரி செலுத்துவோரின் வசதிக்காக அனைத்து பணிமனை வசூல் மையங்களும் வரும் 31ம்தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தினந்தோறும் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கும்.
மேலும், பகுதி, தலைமை அலுவலக வசூல் மையங்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வரும் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தினந்தோறும் இயங்கும். நுகர்வோர்கள் தங்களது நிலுவைத் தொகையினை இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், https://chennaimetrowater.tn.gov.in என்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம்.
மேலும், 200 பணிமனைகளில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்தி வரி செலுத்துவதற்கு ஏதுவாக PoS machine வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய அனைத்து வரிகள், கட்டணங்களை உடனடியாக செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.