கோயில்களுக்கு அறநிலையத்துறை ஊழியர்களை அயல்பணியாக நியமிக்க தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்களை அயல்பணியாக நியமிக்க தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குஇந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் அயல்பணியாக நியமிக்க தடை விதிக்க கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களை கோயில்களுக்கு அயல்பணியாக நியமிக்கும் போது கோயில் நிதியில் இருந்து தான் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. இது இந்து சமய அறநிலையத் துறை சட்டத்துக்கு விரோதமானது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கோயில்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ள அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால் கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அது அரசின் கடமை. இந்து சமய அறநிலையத் துறை கண்காணிப்பாளர்கள், துணை ஆணையர்கள் அயல் பணியாக கோயில்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த தமிழக அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம், அறங்காவலர்களை நியமிப்பதற்காக, மாவட்ட அளவில் குழுக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. நான்கு வாரங்களில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படும் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோயில் அறங்காவலர்கள் நியமனங்களை நீதிமன்றம் கண்காணிக்கும்.

கோயில்களின் அன்றாட பணிகளை கவனிக்கவும், நிலம் மற்றும் சொத்துகளை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போதுமான ஊழியர்கள் தேவை என்பதால் அயல் பணியாக கோயில்களுக்கு இந்து சமய அறநிலைய துறை ஊழியர்கள், அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தடை விதிக்க முடியாது. அறங்காவலர்களை அரசு விரைந்து நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 2வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: