பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விழுப்புரம் கோர்ட் விசாரணையை எதிர்த்த சிறப்பு டிஜிபி மனு தள்ளுபடி

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை கோரி சிறப்பு டிஜிபி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக  சிறப்பு டிஜிபியாக இருந்தவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து சிறப்பு  டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிபிசிஐடி வழக்குப்பதிவு  செய்து, 127 சாட்சிகளை விசாரித்து, 73 ஆவணங்கள் உள்ளிட்டவை அடங்கிய ஆயிரம்  பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர்  நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், குற்ற சம்பவம்  பயணத்தின் போது நடந்துள்ளதாகக் கூறப்படுவதால் வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது  செங்கல்பட்டு நீதிமன்றங்களில் தான் விசாரிக்க வேண்டும் எனவும்,  விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை என்று சஸ்பெண்ட்  செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தார். இந்த மனுவை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர்  நீதிமன்றம், சிபிசிஐடி விசாரிக்கும் வழக்குகளை விசாரிக்க அதிகாரமுள்ளதாக  கூறி சிறப்பு டிஜிபியின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை ரத்து  செய்து, வழக்கை செங்கல்பட்டு அல்லது கள்ளக்குறிச்சி மாவட்ட  நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும், அதுவரை விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சஸ்பெண்ட் ஆன சிறப்பு டிஜிபி உயர்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில் மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில்  மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்தரம் உள்ளதாக போலீஸ் தரப்பில்  வாதிடப்பட்டது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் மீது  தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் மூன்று மாதங்களில் முடிக்க  வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: