கொழும்பு: இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டில் ஈஸ்டர் பண்டிகை அன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 270 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு நடத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதை பயன்படுத்தி, பொதுத்தேர்தலை சந்தித்த இலங்கை பொதுஜன பெராமுனா கட்சி, இஸ்லாமியர்களுக்கு எதிராக ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ கொண்டு வரப்படுமென பிரசாரம் செய்து, சிங்களர்களின் பெரும்பான்மை வாக்கை பெற்று ஆட்சி அமைத்தது.
தற்போது இதற்கான பணியை அதிபர் கோத்தபய ராஜபக்சே தொடங்கி உள்ளார். ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான சட்ட வரைவு தயாரிக்க 13 பேர் கொண்ட குழுவை அவர் நியமித்துள்ளார். அந்த குழுவின் தலைவராக புத்த துறவி கலகொடத்தே ஞானசரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தீவிர இஸ்லாமிய எதிர்ப்பு கொள்கை கொண்டவர். இந்த குழுவில் 4 இஸ்லாமியர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆனால் தமிழர்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கூட தமிழர் இல்லை. இந்த குழு அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதிக்குள் இறுதி அறிக்கையை வழங்க உள்ளது.