பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவுக்கு சின்கா கமிட்டி அடிப்படையில் 10 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு: ஒன்றிய அரசு பதில் மனு

புதுடெல்லி: ‘சின்கா கமிட்டி உத்தரவின் அடிப்படையில் தான் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கூடுதலாக 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது,’ என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு மருத்துவப் மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 10 சதவீதம் வழங்கியதை அமல்படுத்துவது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை கடந்த ஜூலை 30ம் தேதி அறிவிப்பானை வெளியிட்டது.

இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த 10 சதவீத இடஒதுக்கீடும், ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பும் எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது என கேள்வி எழுப்பியது. இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும்படி ஒன்றிய அரசுக்கு கடந்த 21ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, ஒன்றிய அரசு நேற்று தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.  அதில், ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு சின்கா கமிட்டி உத்தரவின் அடிப்படையில் தான் 10 % இடஒதுக்கீடும், ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதனால், ஓபிசி இடஒதுக்கீட்டுடன் இதை ஒப்பிட்டு பார்க்க முடியாது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: