திருப்போரூர்: திருப்போரூர் பஸ் நிலையத்தில், இடையூறாக நின்ற வாகனங்களை பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக பறிமுதல் செய்தது. திருப்போரூர் பஸ் நிலையத்தை ஒட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளது. இது தனியாருக்கு ஏலம் விடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இங்கு தினமும் 150 முதல் 200 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுகின்றன. ஆனாலும், பல்வேறு கிராமங்களில் இருந்து திருப்போரூர் வந்து, அங்கிருந்து சென்னை செல்லும் பலரும் தங்களது வாகனங்களை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல் பேரூராட்சி அலுவலகம், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், பஸ் நிலையத்தின் உள்ளே வரும் மாநகரப் பஸ்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றன.