தமிழகத்தில் வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி கொடுப்பது தொடர்பான விரிவான திட்டம் வகுக்க வேண்டும் : நீதிபதிகள் அதிரடி

சென்னை: தமிழகத்தில் வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான விரிவான திட்டம் வகுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.சேலம் மாவட்டம், கடையாம்பட்டி தாலுகா தாத்தையாம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி, வீடில்லா ஏழை மக்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி, அந்த கிராமத்தைச் சேர்ந்த இந்திய குடியரசு கட்சி மாநில செயல் தலைவர் கருமலை வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறிப்பிட்ட அந்த நிலம், பள்ளி கட்டடம் கட்ட ஒதுக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு தாசில்தாரரால் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு பல துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. மக்கள் நல அரசு வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும். அதேசமயம் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தி விடக்கூடாது. வீட்டு மனை ஒதுக்க கோரி மீண்டும் புதிதாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்ப மனுதாரருக்கு உத்தரவிடுகிறோம். தமிழகம் முழுவதும் வீடற்ற ஏழை மக்களுக்கு நிலம் அல்லது வீடு வழங்குவது தொடர்பாக விரிவான செயல்திட்டத்தை அரசு வகுக்க வேண்டும்.இதற்காக மாவட்டவாரியாக நிலங்களை அடையாளம் காண வேண்டும், என்று வலியுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: